மும்பையின் சாகிநாகா பகுதியிலுள்ள கைராணி சாலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பயங்கர விபத்து நேர்ந்தது. அதாவது ஊர்வலத்தின் போது, உயர் அழுத்த மின்கம்பி இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

 

கஜானன் மித்ர மண்டலத்தின் கணேஷ் ஊர்வலம் கச்சாரா கல்லி, கைராணி சாலையில் நடைபெற்று கொண்டிருந்தது. ஊர்வலம் சன்மான் ஹோட்டலுக்கு அருகே சென்ற போது,  மின் கம்பிகளை தூக்க முயன்றபோது, ஆறு பேர் மின்சாரம் தாக்கி விழுந்தனர். உடனடியாக அவசர உதவி குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களில் பீனு சுகுமாரன் (37) உயிரிழந்தார் என அன்டேரி ஈஸ்ட் செவன்ஹில்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்  தர்மராஜ் சுகதேவ் குப்தா (49), ஆருஷ் அஷோக் குப்தா (6), துஷார் தினேஷ் குப்தா (20), சம்பு நவநாத் காமி (20), கரண் விநோத்கனோஜியா (14) ஆகியோர் பரமவுந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழாக்களின்போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.