தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குருகிராமில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, போக்குவரத்தை நெரிசலை ஏற்படுத்தியது. இரண்டு மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் நிறைந்து, நீண்ட நேரமாக நகரவே முடியாத நிலை ஏற்பட்டது.

 

இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க மக்கள் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில், மணிக்கணக்காக மழையிலும், வண்டி ஓட்ட முடியாத சூழ்நிலையிலும் சிக்கியிருந்த ஒரு இளைஞர், சோர்வடைந்து வேறுபட்ட முடிவெடுத்தார். தன் இருசக்கர வாகனத்தை நேராக தலையில் தூக்கிச் சுமந்து, தன்னுடன் வந்த மற்றொரு இளைஞருடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தக் காணொளி நெட்டிசன்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. “சோர்வும், சிக்கலும் எவ்வளவு கடுமையானது என்பதை இந்த ஒரு வீடியோ காட்டுகிறது”, “இந்த நிலையில் மக்கள் எப்படி சகிக்கிறார்கள்?” என கருத்துகள் குவிகின்றன.