பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில், 60 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஜவஹர்கே கிராமத்தைச் சேர்ந்த ஜக்ஜீவன் என்ற 60 வயதுடைய விவசாயி ஒருவர் தனது சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தபோது, தெருவோரத்தில் இருந்த ஒரு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்தச் சுவர் அவர்மீது நேரடியாக விழுந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சற்றும் எதிர்பாராத வகையில் சுவர் விழுந்ததால், அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருவதால், சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி, பலரது கவனத்தையும் வருத்தத்தையும் பெற்றுள்ளன.

இந்தச் சோகமான சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக ஊடக பயனர் @thind_akashdeep தன்னுடைய கணக்கில் பகிர்ந்துள்ளார். அதில், “மான்சாவின் ஜவஹர்கே கிராமத்தில் தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில், 60 வயது விவசாயி ஜக்ஜீவன் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மாநிலம் முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், பழைய மற்றும் பாதுகாப்பற்ற கட்டிடங்களை  பரிசோதிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.