இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் விமானி கௌரி தவாலிகர், தனது தந்தையை விமானத்தில் வரவேற்கும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பலரது இதயங்களை தொட்டுள்ளது.

கோவாவைச் சேர்ந்த கௌரி தவாலிகர், சென்னையிலிருந்து கோவாவுக்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் முதல் அதிகாரியாக பணியாற்றினார். அந்த விமானத்தில், முன்னாள் கோவா அமைச்சர் தீபக் தவாலிகர் தனது மகளால் இயக்கப்படும் விமானத்தில் பயணிக்கும்போது, விமானி கௌரி, பயணிகளுக்கு நேரில் அறிவிப்பு அளித்து, தந்தையை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

“இது எனக்குப் மிகவும் சிறப்பு வாய்ந்த விமானம். இன்று எனது தந்தை, இந்த விமானத்தில் பயணிக்கிறார்,” என்றார் கௌரி, பெருமையுடன். அவரது இந்த செயல்முறை, பயணிகள் மட்டுமின்றி இணையவாசிகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

 

இண்டிகோ நிறுவனம் X வலைதளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்தது. “அவள் அவர்களின் கைகளைப் பிடித்து வளர்ந்தாள், இப்போது அவள் அவற்றை வானத்தில் பாதுகாப்பாக பறக்க விடுகிறாள்,” எனும் உரையுடன் இந்த வீடியோவை இண்டிகோ பகிர்ந்துள்ளது.

இத்தகைய மனதைக் கொள்ளை கொள்ளும் தருணங்கள், பெண் விமானிகள் கடந்து வந்த பாதையை மட்டும் இன்றி பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் உறவிலும் எப்படி பெருமைசுமந்த தருணங்கள் உருவாகின்றன என்பதையும் நம் முன்வைக்கின்றன.