சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு சிசிடிவி காட்சி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், முதலில் ஒரு தெருநாய் ஒரு பசுவைக் கடிக்கிறது. பசு வலியால் துடிக்க, ஸ்கூட்டரில் வந்த ஒருவர் பசுவை காப்பாற்ற அந்த நாயை குச்சியால் கடுமையாக அடித்து மயக்கமடையச் செய்கிறார். இதற்கிடையில், அங்கு வந்த ஒரு நாய் பிரியர், தெருநாயை அடித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஆனால் சில நொடிகளில் சம்பவம் திருப்பம் எடுத்து, மயக்கமடைந்திருந்த நாய் மீண்டும் சுயநினைவு பெற்று எழுந்து, அதே நாய் பிரியரின் காலைக் கடிக்கிறது.

 

இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில் சிலர், “பசுவை காப்பாற்றியவர் தவறு செய்யவில்லை” என்று ஆதரிப்பதோடு, தெருநாய் தாக்குதலை தடுக்கவே அவர் கடுமையாக நடந்துகொண்டார் என கூறுகின்றனர். மற்றொரு பக்கம், நாய் பிரியர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்கள், “நாயை இப்படிக் கொடூரமாக அடிக்கக்கூடாது” என்று கண்டனம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், பல இணையவாசிகள் இதை ‘கர்மா’ என விவரிக்கின்றனர். “நாய் பிரியர் தனது வாதத்துக்காக நின்ற அதே நாயால் தாக்கப்பட்டார்… இது உடனடி கர்மா” என்று பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சம்பவம் குறித்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான பார்வைகள் கிடைத்துள்ளதுடன், பசு மீட்பு, விலங்கு நலன், தெருநாய் கட்டுப்பாடு போன்ற தலைப்புகளில் சமூக வலைதளங்களில் சூடான விவாதம் வெடித்துள்ளது