இன்றைய காலகட்டத்தில் நடனம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக திடீரென கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். அந்த வகையில் ஹரியானாவின் பரிதாபாத்தில் டெலிவரி ஊழியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் விகல் சிங் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி அன்று அவரது கிராமத்தில் உள்ள நிறுவனத்தின் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்து தனது ஊழியருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மறுத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.