மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரி நகரில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவியாக இருந்த ஹசின் ஜஹானும், அர்ஷி ஜஹானும் – அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட நிலத்தகராறில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.

இந்த விவரங்களைப் பார்க்கும் போது, ஹசின் ஜஹான், தனது மகள் அர்ஷியின் பெயரில் உள்ளதாக கூறப்படும் நிலத்தில் கட்டிடம் கட்ட முயன்றுள்ளார். இதற்கு அண்டை வீட்டு பெண் டாலியா கதுன் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இருபக்கத்தினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம தள்ளுமுள்ளுக்கு மாறியதாகவும், டாலியாவை ஹசின் ஜஹான் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக “@NCMIndiaa” என்ற சமூக ஊடக பக்கம், வன்முறையின் வீடியோவை வெளியிட்டு, இது தொடர்பாக ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகள் மீது BNS சட்ட பிரிவுகள் 126(2), 115(2), 117(2), 109, 351(3) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் கொலை முயற்சி, திட்டமிட்டு தாக்குதல், கூட்டாக சேதம்செய்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். வீடியோ ஆதாரம் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களும் தற்போது ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ஹசின் ஜஹான் மீது இதற்கு முன் பல்வேறு சட்டப்பூர்வ பிரச்சனைகள் இருந்துள்ளன. முகமது ஷமியுடன் நீண்ட நாட்களாகவே அவருக்கு குடும்ப தகராறு நிலவி வந்தது. சமீபத்தில், கொல்கத்தா உயர்நீதிமன்றம், அவரது மகள் மற்றும் ஹசினுக்காக ₹4 லட்சம் மாத பராமரிப்பு தொகை வழங்கும் உத்தரவு பிறப்பித்தது. இதில், ஹசினுக்கு ₹1.5 லட்சமும், அவரது மகள் இராவுக்கு ₹2.5 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலத்தகராறு வழக்கு, ஹசின் ஜஹானின் சட்ட சிக்கல்களை மேலும் மோசமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.