மத்தியப்பிரதேசம் இந்தூரில் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில், ஸ்ரீநகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள தெருவில் நடந்த ஒரு கொடூர சம்பவம், தெரு நாய்களின் அச்சுறுத்தலை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த ஒரு மாணவியை திடீரென நான்கு நாய்கள் தாக்கியது. அந்த நாய்கள் மாணவியின் கால்களை கடித்து, சதையைக் கிழித்ததாக கூறப்படுகிறது. மாணவி தைரியமாக நாய்களை விரட்ட முயன்றாலும், அந்த நாய்கள் திரும்பி வந்து மீண்டும் தாக்கியதாக தெரிகிறது.

மாணவியின் தோழி, அருகில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த நிலையில், வாகனத்தை நிறுத்தி, அவளுக்கு உதவ முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் மாணவி வெறித்தனமான தாக்குதலால் பெரும் பயத்தில் மயக்கமடைந்து சாலையோரத்தில் வீழ்ந்துள்ளார். பின்னர் அங்கு வசிக்கும் விஷால் மற்றும் ஷைஃபாலி அகர்வால் தம்பதியினர் மாணவியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது காயங்களை சுத்தம் செய்து, பராமரித்தனர். காயம் ஆழமாக இருந்ததால், மாணவி தனது தோழியுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும்போது, நாய்கள் அதிகம் திரண்டதற்கான முக்கியக் காரணம் அருகிலுள்ள சோனியா காந்தி நகரில் சிலர் தினமும் எஞ்சிய உணவுகளை வெளியே வீசுவதாகவும், இது தெரு நாய்கள் அதிகம் திரளவும் தாக்குதல்களும் அதிகரிக்கவும் வழிவகுத்திருப்பதாக கூறப்படுகிறது.

நகராட்சி குப்பைகள் சேகரிக்க வருகின்றதாலும், இரவில் சில குடியிருப்பாளர்கள் மீண்டும் எஞ்சிய உணவுகளை வீசுவதால், நாய்களின் எண்ணிக்கையும் தாக்குதலும் கட்டுக்கடங்காத நிலையை அடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.