விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் சமீபத்தில் டிரெண்டானது. தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி  வருகிறது. அந்த வீடியோவில் அவர் மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க. கூமாபட்டி ஒரு தனித்தீவு. இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர் என்று கூறினார்.

இணையதளத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்கு இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு சென்றனர். இதற்கு இடையில் கூமாப்பட்டி பிளவக்கல் அனைப்பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா அமைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் எல்லா இடங்களிலும் பூங்கா அமைக்க முடியாது. இது குறித்து அதிகாரியிடம் பேசி உள்ளேன் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.