
இன்றைய கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டு பல நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கி விடுகின்றனர். அதேபோன்று சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அம்பல வயல் நல்லசாரல் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட அணை ஒன்று உள்ளது.
அந்த இடத்திற்கு ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர்கள் சிலர் நள்ளிரவில் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி ஜீப்புடன் நுழைந்துள்ளனர். மேலும் அங்குள்ள அணைக்கு அருகே உள்ள செங்குத்தான பகுதியில் ஜீப்பை ஓட்டி சென்று ரீல்ஸ் எடுக்கவும் முயன்றுள்ளனர்.
அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அணைக்குள் உள்ள நீரில் பாய்ந்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் இச்சம்பவம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. விடிந்தபின் அப்பகுதிக்குள் இரவு நேரத்தில் இளைஞர்கள் செல்வதை பார்த்த சிலர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தான் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற இளைஞர்கள் ஜீப்புடன் அணைக்குள் விழுந்தது தெரியவந்தது. ஆனால் நல்ல வேளையாக இளைஞர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இச்செயலில் ஈடுபட்ட பனீஸ், முகமது ரஹீம், முகமது நிஜாஸ், முகமது ஷாபி, முகமதுஷானித் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதே இடத்தில் சமீபத்தில்தான் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.