
செகந்திராபாத் பகுதியில் இருந்து விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு ஆந்திரா மாநிலத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரகால சங்கலியை 2 பேர் பிடித்து இழுத்துள்ளனர். உடனே ரயில் நடுவழியில் நின்றதால் ரயிலில் இருந்த காவல்துறையினர் அவசர கால சங்கிலி பிடித்து இழுக்கப்பட்ட பெட்டிக்கு சென்றனர்.
அப்போது அந்த பெட்டியிலிருந்து 2 பேர் திடீரென ரயிலில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் பின்தொடர்ந்த போது அந்த நபர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பித்து சென்றனர். அப்போது காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 2 முறை சுட்டனர். ஆனால் திருடர்கள் அருகில் இருந்த வயல்வெளிக்குள் சென்று மறைந்து கொண்டதால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவத்தின் போது பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தப்பித்து ஓடிய 2 நபர்களும், 7 பேர் கொண்ட பீகார்-மராட்டிய மாநிலத்தில் உள்ள திருட்டு கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது