
சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து மாணவ மாணவிகளும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஆய்வகத்தில் இருந்த பழைய ரசாயன பாடில்களை ஒரு மூட்டையில் தனியாக கட்டி பாலாஜியின் மகனிடம் வெளியில் எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். தன்னால் தூக்க முடியாது அதிக கனமாக உள்ளது என மாணவன் கூறியபோதும் ஆசிரியர்கள் மூட்டையை தூக்கி வெளியே வைக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.
அந்த மூட்டையை மாணவர் தூக்கிக் கொண்டு வெளியே செல்லும்போது பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று இடித்து அதில் இருந்து ஆசிட் பாட்டில் ஒன்று உடைந்துள்ளது. அதிலிருந்து வெளிவந்த ஆசிட் மாணவரின் உடலின் பின்பகுதியில் கொட்டியுள்ளது இதனால் பலத்த காயமடைந்த மாணவர் வலி தாங்க முடியாமல் கதறி உள்ளார்.
உடனே ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பள்ளியில் வைத்து காயங்களை கழுவி தேங்காய் எண்ணெய் போட்டு உள்ளனர். இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. அதனால் மாணவனின் பெற்றோர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில் பள்ளி நிர்வாகத்தின் மீதும் ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று எந்த மாணவருக்கும் நடக்கக்கூடாது. அதனை கருத்தில் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே காயம் அடைந்த மாணவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவரின் உடலில் ஆசிட் கொட்டி காயம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பள்ளியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.