மத்தியப் பிரதேசம் ரத்லத்தில் விரைவில் நடைபெறவுள்ள தொழில்துறை வேலைவாய்ப்பு மாநாட்டில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, போபாலில் இருந்து முதலமைச்சரின் பாதுகாப்புக்கான வாகனங்களின் கான்வாய் ரத்லத்துக்குப் புறப்பட்டு இந்தூரை வந்தது.

இந்தூரில் உள்ள டோசிகான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு டீசல் நிரப்பப்பட்டதும், வாகனங்கள் தானாகவே செயலிழந்து நின்றன. இவற்றில் சில வாகனங்கள் பெட்ரோல் பங்கிலேயே  ஸ்டார்ட் ஆகாமல் நின்றன. இதனால்  பாதுகாப்புப் பணியாளர்களும் நிர்வாக அதிகாரிகளும் வாகனங்களை தள்ளி நகர்த்தும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் மாவட்ட நிர்வாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, முதலமைச்சரின் முக்கிய நிகழ்விற்கு சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக இந்தூரிலிருந்து மாற்று வாகனங்கள் கொண்ட இரண்டாவது கான்வாய் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கலப்பட டீசல் காரணமாகவே இவ்வாறு வாகனங்கள் இயங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பெட்ரோல் பங்க் அதிகாரிகள் மூலம் உடனடியாக சீல் வைக்கப்பட்டதாக எஸ்.டி.எம் அனில் பானா கூறினார்.

“>

 

மோசமான தரம் கொண்ட டீசல் இதற்குக் காரணமென்றும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் பங்குகளில் கலப்படம் தொடரும் சூழ்நிலையை மத்தியப் பிரதேச அரசு தொடர்ந்தும் நிர்வாக ரீதியாக கவனிக்காதது குற்றச்சாட்டாகவும் எழுகிறது.

முக்கிய நிகழ்வுகளுக்கே இந்த அளவுக்கு களங்கம் ஏற்படுவதால், சாதாரண மக்களுக்கு தரமற்ற எரிபொருள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சம்பவம், மாநில அளவில் எரிபொருள் தரம், பராமரிப்பு குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வையும் தூண்டியுள்ளது.