கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிவபுரா கிராமத்தில் அடவி சித்தேஸ்வரா மடம் அமைந்துள்ளது. இங்கு அடவி சித்தேஸ்வரா என்பவர் மடாதிபதியாக இருக்கிறார். இந்த மடத்தில் கடந்த சில நாட்களாக சில முறைகேடுகள் நடப்பதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், சம்பவ நாளில் ஒரு பெண் தன்னுடைய 15 வயது மகளுடன் அங்கு தங்கியிருந்தார்.

இவர்கள் மடாதிபதியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த நிலையில் இது அந்த பகுதி மக்களுக்கு தெரிந்ததும் அவர்கள் மிகவும் கோபம் கொண்டனர். கோபத்தில் அவர்கள் திடீரென மடத்துக்குள் நுழைந்த அந்த பெண்ணையும் அவரது மகளையும் சரமாரியாக தாக்கிய நிலையில் அவர்கள் இருவரும் தங்களை விட்டு விடும்படி சொல்லியும் மக்கள் கேட்கவில்லை.

அவர்களின் ஆடைகளைப் பிடித்து கிழித்த நிலையில் அதனை தடுக்க முயன்ற மடாதிபதி மீதும் சில வாலிபர்கள் தாக்குதல் நடத்தினர். அதோடு மடத்தில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண்ணையும் சிறுமியையும் மீட்டு அவர்களுக்கு அறிவுரை கூறி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு பொது மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய மடாதிபதியே பெண்களுடன் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

அங்கு சில சட்டவிரோத செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில் போலீசார் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.