
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ஹிண்டன் ஆற்றின் கரையில் கிடோலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் தண்ணீர் தேடி வந்த ஒரு 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, முதலில் ஒரு குரங்கை விழுங்கியது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து, மற்றொரு குரங்கையும் விழுங்கியது.
அதனை நேரில் கண்ட கிராம மக்கள் உடனடியாக அந்த மலைப்பாம்பை பிடித்து வைத்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிராம மக்களின் உதவியுடன், மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர்.
அதோடு அதன் வயிற்றில் இருந்த 2 குரங்குகளையும் உயிரிழந்த நிலையில் வெளியே எடுத்தனர் . இந்த மீட்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடிக்கொண்டு மலைப்பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு நுழையும் நிகழ்வுகள் பொதுவாக நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்கள் எந்த வகையிலான விலங்குகளையும் தாங்களாகவே கையாள வேண்டாம். மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக வனத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.