
தூத்துக்குடியில் மேல சண்முகபுரம் பகுதியில் கார்த்திக் குமார் என்பவர் வண்ணார் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்திருக்கிறார். இதனையறிந்த வண்ணார் 3 வது தெருவில் வசித்து வரும் செல்வகுமார் மற்றும் சேர்மகுமார் என்ற சகோதரர்கள் கார்த்திக் குமாரிடம் சென்று தகராறில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஏற்கனவே முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வகுமார் மற்றும் சேர்மகுமார் ஆகியோர் சம்பவ நாளில் அந்த பெண்ணிடம் பேச கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதோடு கார்த்திக் குமாரை அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்த்திக்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செல்வகுமார் மற்றும் சேர்மகுமார் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சகோதரர்களான செல்வகுமார் மற்றும் சேர்மகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.