
சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகரை சேர்ந்தவர் கோபிநாத். இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோபிநாத் மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
அந்த வீட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தன்னுடைய நண்பர்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் உணவு டெலிவரி செய்ய சென்ற கோபிநாத் உணவு டெலிவரி செய்துவிட்டு தன்னுடைய மொபைலில் சார்ஜ் இல்லை அதனால் உங்கள் வீட்டில் சார்ஜ் போட்டுக் கொள்கிறேன் என கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண் சரி என்று சொன்னதால் கோபிநாத் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்பு அந்தப் பெண் சமையலறையில் நின்று கொண்டிருந்தபோது கோபிநாத் சமையலறைக்குள் நுழைந்து உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா சொல்லுங்கள் நான் செய்து தருகிறேன் என கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த பெண் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டார். எனவே கோபிநாத் அங்கிருந்து உடனடியாக சென்று விட்டார். நேற்று மீண்டும் அதே வீட்டிற்கு உணவு டெலிவரி செய்வதற்காக கோபிநாத் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கோபிநாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.