கீழடி ஆய்வு அறிக்கைகளை அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு கூறியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக இது குறித்து எதுவும் தெரிவிக்காததால் திமுக கடும் விமர்சனம் செய்து வருகிறது.

தற்போது கீழடி விவகாரம் குறித்து திமுக ஐடி விங் வெளியிட்ட கார்ட்டுனுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திமுக ஐடி விங் செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியதே அதிமுக ஆட்சியில் தான். அதிமுக குறித்த அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

டி.ஆர்.பி ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவர் கீழடி குறித்து நேரடியாக விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.