உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில், தெருவில் சென்ற வியாபாரியிடம் ஐஸ்கிரீம் வாங்க முயன்றபோது வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு நபர் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விசித்திரமான விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், முதல் தளத்தில் உள்ள பால்கனியில் நின்றுகொண்டிருந்த நபர், தெருவில் சென்ற ஐஸ்கிரீம் வியாபாரியைக் கூப்பிட்டு கீழே இறங்கி வராமலேயே ஆர்டர் செய்துள்ளார். வியாபாரி ஐஸ்கிரீமை மேலே நீட்டி கொடுக்க முயன்றபோது, அந்த நபர் பால்கனி சுவரில் அளவுக்கு அதிகமாக முன்னோக்கி சாய்ந்ததால் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி நேராக கீழே விழுந்தார்.

 

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும் குடும்பத்தினரும், காயமடைந்த அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சோன்பத்ரா போலீஸார் எக்ஸ் (X) தளத்தில், அடிபட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் அங்கு ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.