தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் மாவட்டத்தில் அட்டகுடா பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா (27). இவர் அப்பகுதியில் உள்ள ஹைடெக் சிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூன் 19ஆம் தேதி காலை எப்போதும் போல வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அதனால் பதறிய பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுஷ்மாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மதுர் பகுதியில் உள்ள துர்க்கம் சருவு  ஏரியில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்று காலை ஏரியில் மிதந்து வந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

அந்தப் பெண் காணாமல் போன சுஷ்மா என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சுஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுஷ்மாவை யாரேனும் கொலை செய்து ஏரியில் விசியுள்ளனரா?அல்லது அவர் தற்கொலை செய்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்குச் சென்ற பெண் ஏரியில் சடலமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.