பீகார் மாநிலத்தின் சோன்பூர் ரயில்வே பிரிவில் உள்ள கதிஹார்-பராவுனி ரயில் பாதையில், இன்று அதிகாலை ஒரு துயரமான விபத்து ஏற்பட்டது. பராவுனியிலிருந்து கதிஹாருக்குச் சென்று கொண்டிருந்த 15910 அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் ரயில், கதகோலா மற்றும் செமாபூர் இடையே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்த டிராலி ஒன்றில் மோதியது.

இந்த சம்பவத்தில், ஒரு டிராலிமேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நான்கு ரயில்வே ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து ஏடிஆர்எம் மனோஜ் குமார் சிங்  விசாரணைக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உயர் மட்ட குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறினார். ஓடும் ரயிலின் பாதையில் டிராலி எவ்வாறு வந்தது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இது மனித பிழையா அல்லது திட்டமிடல் குறைவா? என்ற கேள்விகள்  எழுந்துள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு பாதையில் குழப்பம் நிலவியது. டிராலி துண்டு துண்டாக சிதைந்ததுடன், அதனை அப்புறப்படுத்தும் பணிகள் தாமதமாக நடந்தன. இதையடுத்து பாதையில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதியடைந்தனர். இது போன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தவிர்க்க, ரயில்வே பாதுகாப்பு முறைகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.