திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதி வழியாக வரும் ஆம்னி பஸ்களை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தி உள்ளனரா என அதற்குரிய கருவி மூலம் சோதனை நடைபெற்றது. அந்தச் சோதனையில் ஈடுபட்ட மாநகரப் போக்குவரத்து உதவி கமிஷனர் அசோக்குமார் அங்கிருந்த ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “தினம்தோறும் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சுமார் 40 தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்கு வந்து செல்கின்றன. இனி நெல்லை மாவட்டத்தில் தினசரி 2 இடங்களில் சோதனை செய்யப்படும். அந்த சோதனையின் போது ஓட்டுநர் மது அருந்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அவர்களுக்கு வேறு எந்த பகுதியிலும் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி கிடைக்காத சூழல் ஏற்படும். எனவே ஓட்டுனர்கள் மது அருந்தாமல் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் மேலும் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்பி வரவேண்டும் என அறிவுறுத்தினார்.