
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 72 வயது ஆகிறது. இவரது மனைவி மாரியம்மாள். 70 வயதான மாரியம்மாள் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜகோபால்(40) என்ற மகன் உள்ளார்.
நோயால் வலி தாங்க முடியாமல் மாரியம்மாள் அவதிப்பட்டு வந்தார். இதனை பார்க்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த ராஜகோபால் தனது தாய்க்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்.
நேற்று மாரியம்மாளின் தங்கையான ஏசம்மாள் தனது அக்காவை பார்ப்பதற்காக தாராபுரத்திற்கு வந்தார். அப்போது மாரியம்மாள் தனது உடல்நலம் குறித்து தங்கையிடம் கூறி அழுதார். சிறிது நேரம் கழித்து ஏசம்மாள் வீட்டிற்கு வெளியே சென்று அமர்ந்திருந்தார்.
அப்போது வீட்டிற்குள் மாரியம்மாள் அலறும் சத்தம் கேட்டதால் ஏசம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு ராஜகோபால் மாரியம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜகோபாலை கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது, தாய் தினம் துடிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் தான் கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.