கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஹோலி ஏஞ்சல் என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஐந்து அறைகளில் தனி தனியாக டியூஷன் நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியினர் 9-ஆம் வகுப்பு படிக்கும் மகனையும், 7- ஆம் வகுப்பு படிக்கும் மகளையும் டியூசனையும் சேர்த்து விட்டு சென்றனர். கடந்த 10- ஆம் தேதி 7- ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி உட்பட ஐந்து மாணவர்கள் ஒரு அறையில் படித்துக் கொண்டிருந்தனர். இரவு 7 மணிக்கு மகேஷ் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு சிறுமியை தவிர மற்ற மாணவர்களை பாத்ரூம் போயிட்டு வாங்க என கூறி அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு தனியாக இருந்த மாணவிக்கு மகேஷ் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அச்சத்தில் சிறுமி சத்தம் போடவும் பக்கத்து அறையில் படித்துக் கொண்டிருந்த சிறுமியின் அண்ணன் ஓடிவந்து தனது தங்கையை காப்பாற்றினார். அவர் மகேஷை கீழே தள்ளிவிட்டு தனது தங்கையை வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனை கேட்டு கோபமடைந்த பெற்றோர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.