ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன், தமிழக அரசு பல்வேறு சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களைத் தாட்கோ (TAHDCO) வாயிலாக செயல்படுத்தி வருகிறது. இதில், தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாடு, பள்ளி விடுதி கட்டிடங்கள், பராமரிப்பு பணிகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் போன்றவை அடங்கும். இதனடிப்படையில், மானியத்துடன் கூடிய பொருளாதார மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள், வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023-24ம் ஆண்டில் தொடங்கிய “சி.எம்.அரைஸ்” (CM-ARISE) திட்டத்தின் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.90 கோடி மானியம் வழங்கப்பட்டு, 5,000 பயனாளிகள் நன்மை பெற்றுள்ளனர். இதில் 89% பேர் வாகனங்கள், 7% சிறு வணிக கடைகள், 6% ஆடையகம் மற்றும் கட்டடத் தொழில்களில் கடன் பெற்றுள்ளனர். பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 35% வரை (அதிகபட்சம் ரூ.3.5 லட்சம்) மானியமாகவும், தவணையை சரியாக செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமாகவும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற கல்வி தகுதி, வயது வரம்பு எதுவும் தேவையில்லை. பயனாளிகள் இ-சேவை மையத்தில் பதிவு செய்த பின், திட்ட மதிப்பீடு மற்றும் தேவையான தொகை விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.2,353 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதில் ரூ.523 கோடி மானியமாக செலவிடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தொழில் முனைவோர் திட்டங்களை விரைவாக செயல்படுத்த, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி, அழகு நிலையம், வாகன உதிரிப்பாகங்கள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் போன்ற பல்வேறு தொழில்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.