பீகாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்திருப்பதற்குப் பின்னால் அவரது தாயார் ஆர்த்தியின் மிகப்பெரிய தியாகம் உள்ளது. வைபவ் சிறந்த பயிற்சி பெறுவதற்காக பாட்னாவில் உள்ள கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் 100 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

இதற்காக, அவரது தாயார் தினமும் அதிகாலை 2:00 அல்லது 2:30 மணிக்கே எழுந்து, வைபவ் மற்றும் அவருடன் பயிற்சியில் ஈடுபடும் பந்துவீச்சாளர்கள் என சுமார் 10 முதல் 15 பேருக்குத் தேவையான உணவைச் சமைத்து பேக் செய்து கொடுத்துள்ளார்.

வசதியில்லாத மற்ற வீரர்களும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக அவர் காட்டிய இந்த அன்பு மற்றும் கடின உழைப்பு, வைபவ்வின் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான ஊக்கமாக இருந்துள்ளது.

தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில், ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். முந்தைய போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும், இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 44 ரன்களை விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

“>

 

குறிப்பாக, எந்தவிதமான சிக்ஸர்களும் அடிக்காமல், 9 பவுண்டரிகளை மட்டும் அடித்து ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

தனது தாயின் தியாகத்தையும், பயிற்சியாளரின் வழிகாட்டுதலையும் மெய்ப்பிக்கும் வகையில், வைபவ் தற்போது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இளம் வீரராக உயர்ந்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.