மதுரை மாவட்டம் ரத்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவர் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு பாலமுருகன் சுப்புலட்சுமி நகரில் 2 3/4 சென்ட் இடம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்தார்.

அந்த நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தார். சமீபத்தில் பாலமுருகன் அவனியாபுரம் சர்வேயர் ராஜசேகரை சந்தித்து பேசியுள்ளார். அவர் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கூறியதால் பாலமுருகன் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.

அதன் பிறகு ராஜசேகர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் நிலத்தை அளந்து கொடுக்க முடியும் என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பாலமுருகன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாலமுருகன் ராஜசேகரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜசேகரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.