18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இளம் வீரரான வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 7 போட்டிகளில் 252 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதன் மூலம் ஐபிஎல் நிறைவு விழாவில் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை வென்று அசத்தினார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து வைபவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அனைவருக்கும் கனவு. முதல் சீசனில் அதிகமான நேர்மறையான விஷயங்களை கற்றுக் கொண்டேன். அடுத்த சீசனில் அணிக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கற்றுள்ளேன்.

இந்த முறை நான் செய்த தவறு எல்லாவற்றையும் திருத்திக் கொண்டு இன்னும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன். தற்போது விளையாடியதை விட இரு மடங்கு கூடுதலாக அடுத்த சீசனில் விளையாடுவேன். அந்த அளவுக்கு கற்றுள்ளேன் எனது அணி அடுத்த முறை இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் அதில் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பங்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.