ஒடிசா கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இது பற்றி துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. அதோடு மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி இயக்குனரான சந்தோஷ் மிஸ்ராவும் தனியார் நிபுணர் குழுவினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது குழுவினர் நோயாளிகள் உட்பட பலருடன் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா சுகாதார மற்றும் குடும்ப நல மந்திரி முகேஷ் மகாலிங் மாவட்ட கலெக்டருடன் இணைந்து இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது நோயாளிகளின் உடல்நலம் பற்றி கேட்டு அறிந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் நோயாளிகள் உயிரிழக்கும் வகையில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு தெளிவான விளக்கம் அளிக்கும்படி நான் கேட்டுள்ளேன்.

நோயாளிகளின் பாதுகாப்பை முன்னுரிமையான விஷயம் அலட்சியத்துடன் நடந்து கொண்டது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். ஆறாவது நபர் நேற்று காலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அலட்சியம் மற்றும் தவறான ஊசி செலுத்தப்பட்டது தான் உயிரிழப்பிற்கான காரணம் என வெளியான குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.