விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலைஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). இவர் அதிமுக கட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். நேற்று நள்ளிரவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தை கேட்டு கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது வீட்டின் மேலே திடீரென தீப்பற்றி எரிந்தது. இதேபோன்று கிருஷ்ணமூர்த்தியின் உறவினரான சவுந்தர் என்பவரின் வீட்டிலும் இரண்டு முறை பயங்கர சத்தம் கேட்டதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சுற்றி சோதனை செய்தனர். அப்போது வீட்டின் வாசலில் பாட்டில்கள் உடைந்து கிடந்ததை பார்த்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது முன்விரோதத்தின் காரணமாக மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.