
பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்த துருக்கியின் செயல்பாடுகள் காரணமாக, இந்தியா துருக்கி நிறுவனங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவிற்கு, துருக்கியின் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான விமான குத்தகை ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 31, 2025க்குள் முடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இரண்டு போயிங் 777 விமானங்களை துருக்கியிலிருந்து குத்தகைக்கு எடுத்துள்ள இண்டிகோ நிறுவனம், அதனை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்ய நேரிடும்.
இந்த முடிவின் பின்னணி மிக முக்கியமானது. அதாவது மே 7ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததுக்குப் பிறகு, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை தொடங்கியது. இந்த பதிலடி நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் துருக்கி வழங்கிய ட்ரோன் உபகரணங்களை பயன்படுத்தியது. இதனால் இந்தியா மற்றும் துருக்கி இடையிலான உறவுகள் மோசமான நிலைக்கு சென்றன. இதற்குப் பின்னர், துருக்கியின் தரை சேவை வழங்கும் நிறுவனம் செலிபி ஏவியேஷனின் பாதுகாப்பு அனுமதியும் மே 15 அன்று ரத்து செய்யப்பட்டது.
இண்டிகோவின் சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், “இந்திய அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் நாங்கள் முழுமையாக பின்பற்றுகிறோம். எங்கள் பயணிகளுக்கு சிறந்த சேவை வழங்குவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார். இப்போது, மத்திய அரசு தெளிவாக – இந்த மூன்று மாத நீட்டிப்பே இறுதியானது என்றும், அதன் பின்னர் எந்த வகையான தளர்வும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு முக்கியமெனும் அடிப்படையில், துருக்கி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைப்பதற்கான இந்த நடவடிக்கை, இந்தியாவின் வலுவான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நோக்கத்தை உறுதிப்படுத்துகிறது.