சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இந்திரஜித் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  இந்திரஜித் அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு 3-வது மாடியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பில் போடுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு திடீரென ஓடி சென்று மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்திரஜித்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இந்திரஜித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இந்திரஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது இந்திரஜித் -க்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆனது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை. எனவே இவர்  தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.