சேலம் மாவட்டம் சந்தனகிரி பிரிவு சாலை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். அப்போது கல்லாநத்தம் பகுதியில் சேர்ந்த லோகேஷ் என்பவர் தான் ஓட்டி வந்த பால் வண்டியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்தை பார்ப்பதற்காக சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக லோகேஷ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.