
கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 பேர், உயிரிழந்தனர். தற்போது வெளியாகும் உளவுத்துறை தகவலின்படி, இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள “ஸ்பெஷல் சர்வீஸ் கிரூப்” (SSG) எனும் சிறப்பு இராணுவ பிரிவில் கடுமையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரியவந்த்துள்ளது.
இந்த தாக்குதலில் முக்கிய பயங்கரவாதியாக இருந்த ஹாஷிம் முஸா, பாகிஸ்தான் இராணுவத்தில் பரா-கமாண்டோவாக பணியாற்றியவர். பின்னர் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்த அவர், 2023ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார். அதற்குப் பிறகு, காஷ்மீர் மண்டலத்தில் ஆறு பயங்கரமான தாக்குதல்களில் பங்கேற்றுள்ளார். அவருக்கு எதிராக தேடுதல் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றிய தகவலுக்காக ரூ.20 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம், காஷ்மீரில் பெரும் அழிவை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதுதான் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளுடன் நெருக்கமாக தொடர்புடையவர்கள். பாதுகாப்பு அமைப்புகள் தற்போது தெற்கு காஷ்மீரின் வனப்பகுதிகளில் வலைவீசி தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இந்த தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக நிலவி வந்த ‘சிந்து நதி நீர் ஒப்பந்தம்’ இடைநிறுத்தப்பட்டு, இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தான் பிரஜைகளும் நாடு கடத்தப்படுகின்றனர். 2019-ஆம் ஆண்டு தனிச்சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு ஜம்மு-காஷ்மீரில் இது வரை நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.