
கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது மிகவும் அவசியம் ஓட்டுநர்கள் தங்களது பயணம் முழுவதும் நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்வதாகும். இதனால் தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்க மோர் பாக்கெட்டுக்கள் வழங்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி அனைத்து பேருந்து நிலையங்கள், நேர கண்காணிப்பாளர் அறைகள், உணவகம் மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வறைகள் போன்றவற்றில் போதுமான குடிநீர் மற்றும் மோர் பாக்கெட் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எளிதாக அணுகி பயன்பெறும் வகையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தரமான குடிநீரை வழங்க ஆர்.ஓ வாட்டர் இயந்திரங்களை பயன்படுத்தவும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெயில் நேரங்களில் உடலில் நீரேற்றம் அதிகமாக இருப்பதற்காக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ORS பொட்டலங்கள், மோர் பாக்கெட்டுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர்களுக்கு தலைவலி, மயக்கம் போன்ற ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும், வெயில் அதிகமாக உள்ள இடங்களில் தொப்பி அணிந்து பணிகளில் ஈடுபட வேண்டும், பேருந்துகளில் முதலுதவி பெட்டிகள் கட்டாயம் இருப்பதை உறுதி செய்யவும், பேருந்தின் ரேடியேட்டர் வெப்பத்தை அவ்வபோது பரிசோதித்து அதில் குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.