
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் பிடிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை சரமாரியாக விளாசி வருவதோடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்துகிறது. முன்னதாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது.
டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை திரு. ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த திரு.@mkstalin-ன் மாடல் அரசு,
எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.