யமுனை நதி இந்தியாவின் மிகப்பெரிய நதியாகும். இந்த நதி கங்கை ஆற்றின் கிளை நதி. யமுனை நதியின் நீரினை மக்கள் வழிபாடு செய்யும் அளவிற்கு சுத்தமான நீராக இருந்தது. ஆனால் தற்போது யமுனை நதியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதில் பல தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் நச்சு ஆறாக மாறிக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் விரேந்தர் சச்சுதேவ் யமுனை ஆற்றில் குளித்து வழிபாடு செய்தார்.

இதனால் அவருக்கு தோல் நோய் மற்றும் மூச்சு சம்பந்தமான நோய் ஏற்பட்டு உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விரேந்தர் சச்சுதேவ் கூறியதாவது, யமுனை நதி மிகவும் மாசடைந்ததற்கு ஆம் ஆத்மி கட்சியினரே  காரணம், சுமார் 8,500 கோடி மத்திய அரசு யமுனையை சுத்தம் செய்வதற்காக ஒதுக்கியது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் நதியை தூய்மைப்படுத்துவதற்காக வாங்கிய நிதியை அரசுக்கு கணக்கு காட்டவும் இல்லை என குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சவுரவ் பரத்வாஜ் கூறியதாவது, தலைநகர் டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஆறு யமுனை நதியாகும். இதில் எந்தவிதமான தொழிற்சாலை கழிவுகளும் இல்லை. சோனிபட், பானிபட் பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகளே இந்த நதியில் கலக்கின்றன. எனவே அரசு இந்த தொழிற்சாலை கழிவுகளை முற்றிலுமாக நிறுத்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி தலைவர் பதிலளித்தார்.