மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையமே இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் பிரேசிலை சேர்ந்த பெண் பயணி ஒருவர் கடத்தல் மாத்திரைகளை கொண்டு செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போதைப் பொருள் கடத்த முயற்சி செய்த அந்த பெண் பயணியை வருவாய்த்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்தப் பெண் 124 மாத்திரைகளை வயிற்றில் வைத்து கடத்த முயன்றதாக ஒப்புக்கொண்டார். இந்த மாத்திரைகளில் கொகைன் என்ற போதைப்பொருள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அறியவந்துள்ளது. அதன் மதிப்பு ரூபாய் 9.73 கோடி ஆகும். இதுகுறித்து வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரி கூறியதாவது, அந்தப் பெண் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். இவர் 124 கொகைன் மாத்திரைகளை வயிற்றில் கொண்டு சென்று கடத்த முயன்றுள்ளார்.

இந்த மாத்திரைகளின் அளவு 973கிராம் ஆகும். அவரை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளோம். மேலும் அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போதை பொருள்களை எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். மேலும் அப்பெண்ணிற்கு சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகின்றனர்.