மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாதம் 22ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முழுமையாக தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த முறை பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்த முறை பட்ஜெட்டில் வரி விலக்கு குறித்த மிகப்பெரிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த முறை பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு‌ அளிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய வரி விதிப்பு முறை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்கால வைப்பு நிதி வரம்பை 10 வருடங்களாக மத்திய அரசு ரூ.15,000 ஆக வைத்திருக்கும் நிலையில் அதன் வரம்பு ரூ. 25,000 வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.