
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கிரண் கேசு பால்வி என்ற பெண்மணி மகாராஷ்டிரா கோலாப்பூரில் வசித்து வருகிறார். நிறைமாத கரப்பிணியான இவர் நேற்று பூதர்கர் தாலுகாவிலுள்ள திருவாடாவில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உறவினர்கள் 32 பேருடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டும் குழியுமான சாலையில் டிராக்டர் சென்றதால் இவருக்கு பிரசவவலி ஏற்பட்டு உள்ளது.
அதன்பின் டிராக்டரை சாலையோரம் நிறுத்திய உறவினர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். எனினும் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக உறவினர்கள் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்து அதற்குரிய பணிகளில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே இவர்களது தொப்புள் கொடியானது கரும்பு வெட்டும் அரிவாளால் அறுக்கப்பட்டது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த திருவாடா தாலுகா தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும்-சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.