ஆசிய திரைப்பட விருது விழாவிற்கு ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஆங்காங்கில் நடைபெற உள்ள 16-வது ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆறு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது. அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்குனர், சிறந்த உடை அலங்காரம் என ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கின்றது.