பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில் உள்ள சங்க்ஹா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது பிறந்த வீட்டிற்குச் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வரச் சென்ற லவ்பிரீத் சிங் என்ற இளைஞர், அவரது மைத்துனரால் கொடூரமாக உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கடந்த ஜூன் 13ஆம் தேதி நடைபெற்ற இந்த பயங்கர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது. திருமணமான ஒன்பது மாதங்களிலேயே கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி சந்தீப் கவுர் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார்.

“>

மேலும் அவரை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துச் செல்ல லவ்பிரீத் சிங் அங்கு சென்றபோது, அவருக்கும் அவரது மைத்துனரான சாஜன் சிங் என்பவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சாஜன் சிங், திடீரென லவ்பிரீத் சிங் மீது பெட்ரோலை ஊற்றி லையிட்டரால் தீ வைத்துள்ளார்.

இந்தக் கொடூர தாக்குதலின் போது தீப்பற்றி எரிந்த லவ்பிரீத் சிங்கைக் காப்பாற்ற ஓடிவந்த அவரது அண்ணி குர்ஜித் கவுர் மீதும் தீ வேகமாகப் பரவியதால் அவரும் அங்கே கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லவ்பிரீத் சிங் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற குர்ஜித் கவுர் ஆகிய இருவருமே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து தீ வைக்கும் போது குற்றவாளியான சாஜன் சிங்கிற்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சதிச் செயலில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் உயிரிழந்த இளைஞரின் மனைவி சந்தீப் கவுரையும் பஞ்சாப் போலீசார் கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.