தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே மே 14ஆம் தேதி இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கு கடலில் வேகமாக நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுப்பெறும் என்பதால் ஒன்பது துறைமுகங்களில் தற்போது ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர் , புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.