திருமணம் என்றால் ஒரே வீட்டில் இணைந்து வாழ்வது என்ற பாரம்பரிய முறையைத் தாண்டி, தற்போது ‘வீக்-எண்ட் மேரேஜ்’ என்ற புதிய வாழ்க்கை முறை இளம் தலைமுறையினரிடையே பிரபலமாகி வருகிறது. இந்த முறையில், தம்பதியர் வார நாட்களில் அவரவர் வேலை மற்றும் தொழில் நிமித்தமாகத் தனித்தனியாக வசித்துவிட்டு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர்.
இன்றைய ஜென்-ஜி தலைமுறையினர் தங்களது தனிப்பட்ட சுதந்திரம், தொழில் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை இலக்குகளை மிக முக்கியமாகக் கருதுகின்றனர். அதேவேளையில் திருமண உறவையும் விரும்புவதால், சுதந்திரத்திற்கும் உறவுக்கும் இடையே ஒரு சமநிலையைக் கொண்டுவர இந்த முறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
வார இறுதியில் மட்டும் சந்திப்பதால், இருவரும் ஒன்றாகச் செலவிடும் நேரத்தின் மதிப்பு அதிகரிப்பதோடு, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சின்னச் சின்னக் குடும்பச் சண்டைகளும் மன அழுத்தமும் குறைகின்றன என்று இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும், ‘திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதானே தவிர, வாழ்க்கையே திருமணம் அல்ல’ என்ற நவீன சிந்தனையே இதற்கு முதன்மை காரணமாகும்.
இருப்பினும், நீண்ட காலம் தனித்தனியாக வாழ்வது தம்பதியரிடையே உணர்வுப்பூர்வமான நெருக்கத்தைக் குறைக்கக்கூடும் என்றும், குழந்தைகள் பிறந்த பின் அவர்களின் வளர்ப்பில் சவால்கள் வரலாம் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ, இந்த ‘வீக்-எண்ட் மேரேஜ்’ முறை எதிர்காலத்தின் புதிய குடும்ப அமைப்பாக மாறுமா அல்லது வெறும் இணைய ட்ரெண்டாக மறையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
