லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் பெற்ற அபார வெற்றிக்குப் பிறகு, 232 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கிப் பயணித்த பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் தனது அதிரடி பந்துவீச்சால் நிலைகுலைத்தார். அவர் 9 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

<a href=”http://

“>

இதில் பாபர் அசாமின் (16) முக்கிய விக்கெட்டும், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மாஸ்சதகத் முதல் பந்திலேயே டக் அவுட்டானதும் அடங்கும். இதனால் பாகிஸ்தான் அணி 5-வது ஓவரிலேயே 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக தோனியின் சிஎஸ்கே அணியால் 2 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்ட எல்லிஸ், காயம் காரணமாக ஐபிஎல் தொடரை தவறவிட்ட நிலையில், இந்த சர்வதேச போட்டியில் களம் இறங்கி அராஃபத் மின்ஹாஸ் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோரையும் வீழ்த்தி அசத்தினார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி, கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் (51) மற்றும் கேமரூன் கிரீன் (53) ஆகியோரின் பொறுப்பான அரைசதங்களின் உதவியுடனும், மேட் ரென்ஷாவின் (43) அதிரடியாலும் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளராக நாதன் எல்லிஸ் மட்டுமே இருந்தபோதிலும், அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான மேத்யூ ஷார்ட் (3 விக்கெட்டுகள்), ஆடம் ஜம்பா மற்றும் தன்வீர் சங்கா ஆகியோருடன் இணைந்து அவர் சிறப்பாகச் செயல்பட்டார்.

பாகிஸ்தான் தரப்பில் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் 104பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அணியை மீட்கப் போராடிய போதிலும், மற்ற வீரர்களின் ஆதரவு இல்லாததால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாமல் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இதே லாகூர் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.