மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பேட்டை பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கண்ணன் தனக்கு புதையல் மூலமாக 296 தங்க காசுகள் கிடைத்ததாக தெரிவித்தார். அவரிடம் இருந்த 2 தங்க காசுகளை வாங்கி சோதனை செய்தபோது அது தங்கம் என்பது தெரிந்தது.

இதனை நம்பி ராஜாமுகமது 2 லட்ச ரூபாயும், அவரது நண்பர் முத்தலிபு 5 லட்சம் ரூபாயும் கண்ணனிடம் கொடுத்து தங்க காசுகளை வாங்கியுள்ளனர். இதனையடுத்து தங்க காசுகளை சோதனை செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜா முகமது கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போலியான தங்கக்காசு கொடுத்து ஏமாற்றிய கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.