தமிழ்நாட்டில் முதல்முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை  முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதேபோன்று திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாணவி நந்தினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று டிஜிபி சைலேந்திரபாபு மாணவி நந்தினியை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டினார்.

அப்போது மாணவி நந்தினியிடம் எப்படி 600 மதிப்பெண்கள் முழுமையாக எடுக்க முடிந்தது என்றும், சிறப்பாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவி நந்தினி என்னுடைய குடும்பம் வறுமையில் வாடினாலும் நான் எப்போதும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டது கிடையாது. சிறுவயதில் இருந்து எனக்கு படிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் தான் நான் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க காரணம். நான் துவண்டு போகும் போதெல்லாம் எனக்கு நானே பேசிக் கொள்வேன். என்னுடைய self motivation தான் என் வெற்றிக்கான ரகசியம் என்று கூறியுள்ளார்.