தர்மபுரியில் இருந்து நேற்று காலை அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜெயவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜெயராமன் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லாலிக்கல் ஏரி அருகே சென்றபோது ஜெயவேல் முன்னால் சென்ற தனியார் கல்லூரி பேருந்தை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.