தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குணாள்தாஸ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என குணால் தாஸ் கூறியதை நம்பி விஜயகுமார் உள்ளிட்ட 8 பேர் 5 லட்ச ரூபாய் வீதம் 40 லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் கொடுத்தனர்.

அதன் பிறகு குணால் தாஸ் விஜயகுமார், ஆரோக்கியசாமி, விஷ்ணு ஆகிய 3 பேரையும் துபாய்க்கு அனுப்பி வைத்து அங்கிருந்து நியூசிலாந்து செல்வதற்கான விசாவை கொடுத்துள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது விசா போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேரும் தர்மபுரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குணால் தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.