திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் இருக்கும் செயல்படாத கல்குவாரி குட்டையில் ஆணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்த நபரின் உடலை மீட்டனர். மேலும் இறந்தவர் அணிந்திருந்த டி-ஷர்டில் ராமு பாய்ஸ், கே.ஜி.எம் என அச்சிடப்பட்டிருந்தது. மேலும் வாலிபரின் கை, கால்கள் மற்றும் வாய்ப்பகுதி கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்ததற்கான அடையாளங்கள் இருந்தது.

அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரரான மணியின் உடல் தான் குட்டையில் மிதந்தது தெரியவந்தது. அவரை முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.